இதழ்: இருபத்தி நான்கு , செப்டம்பர்
ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா
தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
2020-2021-ம் கல்வியாண்டின் மெய்நிகர் வகுப்புகள் இனிதே தொடங்கி சில வாரங்கள் ஆயிற்று. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவொருக்கொருவர் அறிமுகமாகி முழுவீச்சோடு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரத்தில் இக்கல்வியாண்டிற்கான புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. இன்னும் புத்தகங்கள் பெறவில்லையெனில் பெற்றோர்கள் உடனடியாக நிர்வாகக்குழுவை தொடர்பு கொண்டு புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
பெற்றோர்களுக்கு Zoom பயன்பாட்டில் எவ்வித ஐயப்பாடு இருக்குமாயின் நிர்வாகக் குழுவையும், கிளை முதல்வரையும் தயங்காமல் அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளவும். மேலும் வகுப்புகள் செயல்பாட்டில் பரிந்துரை இருக்குமாயின் ஆசிரியர் குழுவை அணுகவும்.
மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் இன்றைய நிலை ஒரு சவாலான கால கட்டம் தான், நாளடைவில் இச்சூழல் குடும்பத்தின் பிணைப்பை மேலும் அதிகப்படுத்தும் என்பதை நாம் மறக்க வேண்டாம், ஆகையால் இச்சூழலை ஊக்கத்துடனும் மகிழ்வோடும் எதிர்கொள்வோம்.
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
சென்ற இதழில், மாணவர் பகுதியில் வெளிவந்த ஓவியங்களை பார்க்கும் போது நம் குழந்தை பருவத்தில் நாம் வரைந்ததை எண்ணாமல் இருக்க இயலவில்லை. குழந்தைகளுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.
சிறுகதைப் பகுதியில் வெளிவந்த பாம்பு வீடு சிறுகதையும் அதில் இடம் பெற்றிருந்த ஓவியங்களும் குழந்தைகளுக்கு எளிதில் புரியும் படியுமாகவும் , அவர்கள் விரும்பி படிக்கும் வகையிலும் இருந்தாக பெற்றோர்கள் தெரிவித்தனர். முனைவர் ச.பாரதி அவர்களுக்கு ஆசிரியர் குழுவும் , தமிழ் பள்ளியும் மிகுந்த நன்றியை உரித்தாக்குகிறது.
“கம்பர் காணவிழைந்த சமூகம்!” கட்டுரையில், ஒரு கவிஞரின் சிறப்பை அவருடைய பொதுவுடைமை சித்தாந்தத்தின் மூலம் அறிய முடியும் என்பதை மிக எளிய பாடல்களால் மேற்கோள் காட்டியமை அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தது. கம்பர் போன்ற நற்றமிழர் வாழ்ந்த தமிழ் நிலத்தில் நாமும் இருந்தோம் என்று எண்ணும் போது, ஒருசேர மகிழ்வும், செருக்கும் , பெருமையும் அடைந்தோம். ஆசிரியர் மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு எங்கள் நன்றி.
உலக வரலாற்றை எங்களுக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் முனைவர் பரிமளாநாதன் அவர்களுக்கு முதலில் எங்கள் நன்றி. உயரியான பண்பான விருந்தோம்பல் தமிழ் நாகரிகத்தில் மட்டுமன்று, உலகின் பல்வேறு நாகரிகங்களிலும் விருந்தோம்பல் கடைபிடிக்கப்பட்டதையும், கிரேக்கர்கள் விருந்தோம்பலுக்கென்றே ஒரு தெய்வத்தை நியமித்துக் கொண்டதையும், வரலாற்றில் Penelope, Telemachus போன்ற மனிதர்கள் பற்றி அறிய முற்படும் போதும் வியப்பே மேலோங்கியது.
“கேள்வி பதில்” பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை newsletter@tampabaytamilacademy.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
செவி வழிக்கல்வி - திருக்குறள்
|
![]() |
இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்
திருக்குறள் நடுவு நிலைமை விளக்கம்
திருக்குறள் விருந்தோம்பல் விளக்கம்
மாணவர் பகுதி
மாணவர் பகுதிக்கு தொடர்ந்து வரும் ஆதரவைக் கண்டு பேருவகை கொண்டோம். பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும். கோடை கால பேச்சு பயிற்சி வகுப்புகளின் மாணவர் செயல்பாட்டின் ஒரு சிறு தொகுப்பு இதோ உங்களுக்காக, |
ஆசிரியர் அறிமுகம்
திருமதி லீலா சோமசுந்தரம்
பள்ளிப்பருவத்தில் பல்வேறு தமிழ் கவிதை போட்டிகளில் கலந்துகொண்டு தனது தமிழ் திறமையை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம் இவரது தமிழார்வம் புலப்படுகிறது. தனது பிள்ளைகளின் தமிழறிவு மேம்பட வீட்டில் தமிழ்மொழியில் பேசுவதோடு மட்டுமல்லாமல், பேச்சு வழக்காக தமிழ் பழமொழிகள், திருக்குறள் போன்றவற்றையும் மேற்கோளிட்டு காட்டுவதாக கூறுவது சிறப்பு. சிறுவயதில் வார சஞ்சிகைகளில் வரும் தமிழ் கதைகளை விரும்பி படித்ததாக கூறுகிறார். அப்படிப் படித்ததே ‘பொன்னியின் செல்வன்’ என்று பெருமையுடன் கூறுகிறார். சிலப்பதிகாரம், பொன்னியின் செல்வன்,திருக்குறள் போன்றவை இவரது மனதை தொட்ட சிறந்த நூல்கள் என பட்டியலிடுகிறார். இவ்வாறு தனது முழுமுதல் தன்னார்வத்தோடு, தமிழ் ஆர்வமும் இணைய, குழந்தைகளுக்கு தமிழ்மொழி கற்றுக்கொடுக்க TBTA-வில் இணைந்ததாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். |
![]() சொந்த ஊர் : சென்னை |

சிறுவயதிலிருந்தே பல்வேறு தமிழ் இலக்கிய போட்டிகள், பேச்சுப்போட்டி, தமிழ் மன்றத் தேர்வுகள் என தமிழ் சார்ந்த பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியுள்ளார். தமிழ் ஆசிரியரான இவரது தாத்தாவின் உந்துதலினால் தான் தமிழ் ஆர்வம் மேலோங்கியது என்று பெருமைப்பட கூறுகிறார்.தமிழ் மொழிக்கு தன்னால் இயன்ற ஒரு பங்களிப்பை தரவேண்டும் என்கிற இவரது எண்ணம் சிறப்பு.ஓய்வு நேரங்களில் தமிழ் நாவல்கள், இதிகாச காவியங்கள் போன்றவற்றையெல்லாம் கைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு படிப்பது இவரது பொழுதுபோக்கு. தன் பிள்ளைக்கு நீதிக் கதைகள் பலவற்றை கூறுவதோடு திருக்குறள்,பாரதியார் கவிதைகள் போன்றவற்றையும் கற்றுத் தருகிறார்.தனது பிள்ளையின் தமிழறிவு மேம்பட பேச்சுப்போட்டி, இசைப் போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்வதாக கூறுகிறார்.மேலும் வீட்டில் தமிழ் மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கப்படுத்திக் கொண்டதோடு தவறியும் ஆங்கிலம் கலந்துவிட்டால் அதையும் தமிழில் திருத்தி பேச செய்வது அருமை.இவ்வாறு தமிழ் ஆர்வத்துடனும், தன்னார்வத்துடனும் தமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க TBTA-வில்இணைந்து செயல்பட முன்வந்துள்ளார் |
![]() சொந்த ஊர் : பொன்னேரி |
இவர்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!
சிறுகதை பகுதி - கடலே கடலே
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
பாப்பா, உனது School assignment முடித்து விட்டாயா? | பாப்பா, உனது பள்ளி பணியை முடித்து விட்டாயா? |
இன்றைக்கு next session எப்பொழுது? | இன்றைக்கு அடுத்த அமர்வு எப்பொழுது? |
Break Timeல உன் கண்ணுக்கு rest கொடு | இடைவெளி நேரத்தில் உன் கண்ணுக்கு ஒய்வு கொடு |
நான் homework upload பண்ணிட்டேன் | நான் வீட்டு பாடத்தை பதிவேற்றம் செய்து விட்டேன் |
நம் எல்லோருக்கும் virtual learning ஒரு புதிய அனுபவம் | நம் எல்லோருக்கும் மெய்நிகர் கற்றல் ஒரு புதிய அனுபவம் |
இலக்கிய பகுதி
முதுமொழிக் காஞ்சி
ஆசிரியர் பெயர் - மதுரைக் கூடலூர் கிழார்
முதுமொழிக் காஞ்சி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. ‘மூதுரை, முதுசொல்’ என்பனவும் இப் பொருள் தருவன. ‘காஞ்சி’ என்பது பல்வேறு நிலையாமைகளைக் குறித்தது என்பர் தொல்காப்பியர்.
புறப்பொருள் வெண்பாமாலையில்‘முதுமொழிக் காஞ்சி’ என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, ‘மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி’ என்றுதொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்,
'பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று'
என்று விளக்கியும் ஆசிரியர் உரைத்துள்ளார்.
உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர் பெருமக்கள் எடுத்து இயம்புவது என்னும் இலக்கணம் ‘முதுமொழிக்காஞ்சி’ என்னும் நூற்பொருளுக்குப் பொருந்துவதாகும். ‘காஞ்சி’ என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பலமணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்தநூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்று கருதுவாரும் உண்டு. அங்ஙனம் கொள்ளின், முதுமொழிக் காஞ்சி என்பது ‘அறிவுரைக் கோவை’ என்னும் பொருள் பயந்து நிற்கும்.
இந்நூல் பத்து அதிகாரங்களையும், ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பத்து குறட்டா ழிசைகளையும் கொண்டது. அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறுவது.
சிறந்த பத்து,அறிவுப்பத்து,பழியாப் பத்து,துவ்வாப் பத்து,அல்ல பத்து,இல்லைப் பத்து,பொய்ப் பத்து, எளிய பத்து,நல்கூர்ந்த பத்து ,தண்டாப் பத்து எனப் பத்து அதிகாரங்களை கொண்டது. இந்நூலின் ஒவ்வொரு பத்தும் ‘ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்’ எனத் தொடங்குகிறது. இனி ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் சில சான்றுகளை இங்கே காணலாம்.
சிறந்த பத்து
‘ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை’ பொருள்: கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்து ஆசாரமுடைமை.
‘வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை’ பொருள்: செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை.
அறிவுப்பத்து
‘ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப’ பொருள்: கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்.
‘ஈரம் உடைமை ஈகையின் அறிப’ பொருள்: ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும் கொடையினானே அறிவர்.
பழியாப் பத்து
‘ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்குணம் பழியார்’ பொருள்: கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத இயற்கையாகிய குணத்தை யாவரும் பழியார்.
‘சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்’ பொருள்: சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார்.
துவ்வாப் பத்து
‘ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது’ பொருள்: கடல் சூழ்ந்த உலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம் வறுமையின் நீங்கியொழியாது.
‘கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது’ பொருள்: ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது.
அல்ல பத்து
‘ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்’ பொருள்: கடல் சூழ்ந்த உலகத்து மக்கட் கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள் மனையாளல்லள்.
‘அறத்தாற்றின் ஈயாத(து) ஈகையன்று’ பொருள்: அறத்தின் நெறியின்ஈயாதது ஈகையன்று.
இல்லைப் பத்து
‘ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை’ பொருள்: கடல் சூழ்ந்த உலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற்பெறும் பேறில்லை.
’ இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை’ பொருள்: இரப்போர்க்குக்கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை.
பொய்ப் பத்து
‘ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறவி னோன்இனிது வாழா மை பொய்’ பொருள்: கடல் சூழ்ந்த உலகத்து எல்லா மக்களுள்ளும், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.
‘வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்’ பொருள்: மனத்தின்கண் தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்.
எளிய பத்து
’ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது பொருள்: கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழுபெறுதல் எளிது.
‘பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது’ பொருள்: பெண்டிரை மிக விரும்பினார்க்குஉண்டாகும் பழி எளிது.
நல்கூர்ந்த பத்து
’ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று பொருள்: கடல் சூழ்ந்த உலகத்துள் எல்லா மக்கட்கும்,முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்.
’ அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று’ பொருள்: மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச்சென்று நண்ணுதல் வறுமையுறும்.
தண்டாப் பத்து
’ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான் பொருள்: கடல் சூழ்ந்த உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன் பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்.
‘துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்’ பொருள்: துன்பத்தை விரும்பிய ஒருவன் இன்பத்தை இன்பமென்று களையான்.
இவ்வாறு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான நீதிக் கருத்துகள் பொதிந்த பல தொடர்களை உள்ளடக்கிய ஓர் அறநூல் பெட்டகமாக முதுமொழிக்காஞ்சி திகழ்கிறது
நாலடியார் நவிலும் செல்வத்தின் இயல்பு!
|
![]() |
அறத்தோடு வாழ்வதில்தான் மனித வாழ்வு சிறக்கின்றது; மன நிறைவும் பிறக்கின்றது. ஆனால், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதத்தையும் மனிதன் அறிந்துகொள்வது யாங்ஙனம்?
தன் முன்னோரிடமும் மூத்தோரிடமும் கேட்டு அவன் அறிந்துகொள்ளலாம். ஆனால் அம்மூத்தோர் தாமறிந்தவற்றை மட்டுமே அவனுக்கு அறியத்தர முடியும். ஆகவே, அறம் குறித்தும் இன்னபிற வாழ்வியல் விழுமியங்கள் குறித்தும் ஒருவன் கசடறக் கற்றுத்தெளியவும், தேரவும் வேண்டுமெனில் அதற்கு அறநூல்களே சிறந்த துணையாவன.
அத்தகு அறநூல்களுக்குத் தமிழில் பஞ்சமில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை மானுட அறங்களை வகுத்தும் தொகுத்தும் அழகாய்ச் செப்புகின்றன. அவற்றில் முதன்மையானவை திருக்குறளும், நாலடியாரும் ஆகும்.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
எனும் சொலவடையை நாமறிவோம். இங்கே நாலு என்று குறிக்கப்படுவது நாலடியார்; இரண்டு என்று குறிக்கப்படுவது திருக்குறள். இவ்விரு நூல்களையும் ஒருவன் கற்றால் சொல்லுறுதி பெறுவதோடு மட்டுமின்றி அறவாழ்விலும் வழாது நிற்பான் என்று அறுதியிட்டுக் கூறலாம்.
உலகப்பொதுமறை எனும் சிறப்போடு ஞாலம் போற்ற வலம் வரும் திருக்குறளோடு ஒப்பவைத்து எண்ணத்தக்கது நாலடி. நான்கு அடிகளால் அமைந்த வெண்பாக்களால் இயன்ற இந்நூல் ’ஆர்’ எனும் சிறப்பு விகுதிபெற்று நாலடியார் என்று நுவலப்படுகின்றது.
திருக்குறள் சூத்திரம் போன்று சுருங்க உரைக்கும் பொருளை, அழகிய உவமைகளோடும் தக்க உதாரணங்களோடும் கற்போர் உளங்கொள்ளும் வகையில் சற்றே விரித்துரைக்கின்றது நாலடியார்.
நானூறு பாடல்களைக் கொண்டிருப்பதால் ’நாலடி நானூறு’ எனும் பெயர்பெற்ற இந்நூலுக்கு ’வேளாண் வேதம்’ எனும் மற்றொரு பெயரும் உண்டு என்பதை ஒரு தனிப்பாடல் வாயிலாய் அறிகின்றோம்.
வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்
எல்லாரும் கூடி எடுத்துரைத்த - சொல்லாய்ந்த
நாலடி நானூறும் நன்கினிதா என்மனத்தே
சீலமுடன் நிற்க தெளிந்து.
ஆயினும் இந்நூலில் நுவலப்படும் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானவை அல்ல என்பதனை இதனைக் கற்றோர் நன்குணர்வர்.
சமண முனிவர்களால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பாய்க் கருதப்படுகின்ற இந்நூலும் திருக்குறளைப் போலவே அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என முப்பகுப்பாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்குப் பதுமனார் எனும் புலவர்பெருந்தகை உரைசெய்தார் என்று சொல்லப்படுகின்றது; ஆனால் அவ்வுரை இப்போது கிடைத்திலது.
சொல்நயமும் பொருட்செறிவும் மிக்க நாலடியார் எனும் இந்நன்னூலின்கண் இடம்பெற்றுள்ள செல்வத்தின் தன்மை குறித்த பாடல்கள் சிலவற்றைச் சிந்திப்போம்.
குற்றமற்ற சிறந்த செல்வம் ஒருவனுக்கு வாய்த்தேபோதே, பகடு வயலின்கண் நடந்ததானால் (உழுததனால்) கிடைத்த உணவை, அவன் விருந்தினரோடும் (புதியவர்), தமரோடும் (சுற்றம், நட்பு) சேர்ந்துண்ணல் வேண்டும்.
ஏனெனில் ஓரிடத்தில் நிலைத்து நில்லாது சகடக்கால்போல் மாறிமாறிப் புரளும் இயல்புடையது செல்வம். ஆதலால் அச்செல்வத்தின் பயனை முழுமையாய்த் துய்க்கவேண்டுமானால் அது கையத்தே இருக்கும்போதே விரைந்து செயலாற்ற வேண்டும் என்கிறது இப்பாட்டு.
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும். (நாலடி – 2)
பொருளை ஈட்டுவது பெரிதன்று! அதனை நல்வழியில் ஈட்டுவதே மாணப் பெரிது. அதைத்தான் ’துகள்தீர் பெருஞ்செல்வம்’ எனும் தொடர் ஈண்டுச் சுட்டிநிற்கின்றது. பகடு என்பது எருதைக் குறிக்கும். எருதில்லையேல் உழவில்லை என்ற நிலையிருந்த காலமது. உழவனின் உற்ற நண்பனாய்த் திகழ்ந்த எருதுகள், அவனுக்கு நெல்லை விளைவித்துக் கொடுத்துவிட்டுத் தாம் (அதன் சக்கையான) வைக்கோலைத் தின்று வாழ்பவை. எருதின் இந்த அருங்குணத்தை, உழுத நோன்பகடு அழிதின்றாங்கு
என்று போற்றுகின்றது புறநானூறு.
தம்மிடம் இருப்பதைப் பகுத்துண்ணும் அறப்பண்பை வள்ளுவமும் விதந்தோதுகின்றது.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (322)
காலையில் தோன்றும் பகலவனை, பொழுதை அளக்கும் நாழி எனும் கருவியாய்க் கொண்டு, மாந்தரின் வாழ்நாளைத் தானியத்தை உண்பதுபோல் ஒவ்வொரு நாளும் அளந்துண்ணும் இயல்புடையது கூற்றம். ஆதலால், வையத்து மாந்தர் எவ்வளவு அறச்செயல்களைச் செய்ய முடியுமோ அவ்வளவையும் விரைந்துசெய்து அருளுடையராதல் வேண்டும். அவ்வாறு அறஞ்செய்யாது மரம்போல் வாழ்வார் பிறந்தும் பிறவாதாரே என்கிறது மற்றொரு நாலடியார் பாடல்.
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதா ரில். (நாலடி – 7)
இதையே,
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாரும் வைக்கப் படும் (214)
என்று வேறுவார்த்தைகளில் விளம்பினார் செந்நாப்போதார்.
“நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்”
(சிலம்பு - நடுகற் காதை)
என்று அறம் செய்யவேண்டியதன் அவசியத்தை மட்டுமல்லாது அவசரத்தையும் விளக்கிப் போந்தது நெஞ்சையள்ளும் சிலம்பு.
“செல்வத்துப் பயனே ஈதல்”
என்று ஆன்றோரும் சான்றோரும் திரும்பத் திரும்பச் சொன்னபோதிலும்கூடச் சிலர் எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டார்கள். மற்றவர்களுக்குத்தான் எதுவும் கொடுப்பதில்லை; தம்மளவிலாவது தாராளமாக உண்டும் உடுத்தும் வாழ்கின்றனரா என்றால் அதுவும் செய்யமாட்டார்கள்!
இத்தகு மனிதர்கள் வருந்தித் தொகுத்த செல்வத்தால் ஆய பயன் என்ன? எனும் கேள்விக்குத் தக்கதோர் பதிலிறுக்கின்றது பின்வரும் பாடல்.
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட
உய்த்தீட்டும் தேனீக் கரி. (நாலடி – 10)
தேனீக்கள் மிகுந்த சிரமப்பட்டுத் தேனைச் சேகரிக்கின்றன. ஆனால் அத்தேனால் அவற்றுக்கு எந்தப் பயனும் விளைவதில்லை. மாறாக மனிதர்கள் அந்தத் தேனிறாலை (தேனடை) எவ்வித உழைப்புமின்றித் தமதாக்கிக் கொண்டுவிடுகின்றார்கள். அதுபோல், பிறர்க்கும் ஈயாது, தானும் துய்க்காது வாழ்வோனும் தன் செல்வத்தைப் பிறரிடம் இழப்பான்; அதற்கு இத்தேனீக்களே தக்க சான்று என்கிறது இப்பாடல்.
ஈத்துவக்கும் இன்பம் அறிந்தோரே வாழ்வைப் பொருளோடு வாழ்வோர் ஆவர். ஏனையோர் வாழ்வை நன்முறையில் வாழத்தெரியாது செல்வத்தை வைத்திழக்கும் வன்கணவரே!
கேள்வி பதில் பகுதி
|
![]() |
கேள்வி:
பழந்தமிழகத்தில் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இருந்த சிறப்பான உறவு யாவரும் அறிந்ததே. இதே போன்ற அரசர்- புலவர் உறவு உலக நாகரிகங்களில் வேறு எங்கு காணப்படும்?
பதில்:
தற்போதைய Ireland மற்றும் scotland நாடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு பெயர் Gaels. Celtic எனப்படும் பழங்குடி மக்கள் ஐரோப்பாவின் பெரும் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள். இதே மக்கள் Irelandலும் Scotland இலும் Gaels என்று அழைக்கப்பட்டனர். அவர்களைச் சார்ந்த கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் Gaelic culture, Gaelic literature என்பார்கள். இந்த Gaelic மக்கள் சமுதாயத்தில், பழங்காலத்தில் சிறு சிறு கிராமங்கள், மலையைச் சார்ந்த சிற்றூர்கள், சிறு நகரங்கள் இருந்தன. இவ்வாறான கிராமங்கள்,சிற்றூர், நகரங்கள் ஒவ்வொன்றிற்கும் தலைவர் அல்லது சிற்றரசர்கள் இருந்தார்கள். இவர்கள் நமது தமிழகத்து அரசர்கள், வேளிர்கள் போல் ஒருவர் மீது ஒருவர் படையெடுப்பதும், ஆநிரை கவர்வதும், கோட்டைகளைத் தகர்ப்பதுமாக வாழ்ந்தார்கள். நம் சங்ககாலத்து அரசர்கள் போலவே பாணர்களையும் புலவர்களையும் பேணி வந்தார்கள். தம் அவைக்களிங்களில் அவர்களை தக்கவைத்துக் கொண்டார்கள். அவர்களும் இந்த அரசர்களையும், தலைவர்களையும் பாடி புகழ்ந்தார்கள். இனி இந்த Gaelic அரசர் - புலவர் உறவை நம் சங்க காலத்து அரசர் - புலவர் உறவுடன் ஒப்பிட்டு நோக்கி அதில் உள்ள ஒற்றுமைகளை சுருக்கமாக பார்ப்போம்.
சங்ககாலத்தில் பாணர் என்றும் புலவர் என்றும் இரு வகுப்பினர் இருந்தனர். இவர்களுக்குள் உள்ள வேறுபாடு யாது? பாணர்கள் சிறூர் மன்னர் எனப்படும் சிறுகுடி தலைவர்களை சார்ந்தவர்கள். கல்வியறிவு இல்லாதவர்கள். பாடல் திறனும், பாடல்களை பண்களுடன் பாடும் திறனும் பெற்றவர்கள். வாய்வழி செய்திகளையும், சிறு சிறு வரலாறுகளையும், தம்மை ஆதரித்த சிறூர் தலைவர்களின் வீரச் செயல்களையும், அறச் செயல்களையும் பாடும் திறமை உடையவர்கள். பெரும்பாலும் வறுமையிலேயே வாழ்பவர்கள். சிறூர் தலைவன் வேந்து விடு தொழிலில் போருக்கு சென்று வெற்றி அடைந்து பொருட்களைக் கொண்டு வந்து அவர்களுடன் பகிர்ந்து கொண்டால் தான் இவர்களின் வறுமை சற்று நீங்கும். சிறூர் தலைவர்களையும் மற்ற வேளிர்களையும் நம்பித்தான் இவர்கள் வாழ்ந்தார்கள்.
புலவர்கள் என்பவர்கள் வேந்தர்களையும், அரசர்களையும், அதாவது மருத நிலத்தலைவர்களை சார்ந்து இருப்பவர்கள். கல்வி கேள்விகளில் தேர்ந்தவர்கள். இலக்கிய நுண்ணறிவு படைத்தவர்கள். அரசனுக்கு அறிவுரை வழங்கும் தகுதி வாய்ந்து, சான்றோர் என்று அழைக்கப்பட்டவர்கள். பாணர்கள் பண்களுடன் பாடினால், புலவர்கள் செய்யுட் வகைகளை கையாண்டு இலக்கியத்தரம் வாய்ந்த பாடல்களை இயற்றினார்கள். சுருங்கச் சொல்லப்போனால்,if the பாணன் provided the seed or the general concept, the புலவன் refined it and finessed it through his learning and knowledge of prosody (science of poetic meters).பாணர்களும் எதுகை மோனையை கையாண்டார்கள் ஆனால் புலவர்கள் அதை செம்மை படுத்தினார்கள் - refined and made it classical.இது நிற்க.
தமிழ் நாகரிகத்தில் பாணன் நிலையில் இருந்தவன் Gaelic நாகரிகத்தில் ‘bard’ எனப்பட்டான் . Gaelic ‘bard’-உம் தமிழ் பாணனைப் போல் கதை கூறுவதையும், பாடல் பாடுவதையும், இசைப் பண்ணை இயற்றுவதையும், வாய்வழி வரலாறு கூறுவதையும் தொழிலாகக் கொண்டவன். ஒரு சிற்றரன் அல்லது மேல் குடியினர் எனக் கருதப்படும் Nobleman ஆகியோரால் ஆதரிக்கப்பட்டவன். தன்னை ஆதரித்த இவர்களின் புகழ் பாடுவதும், அவர்களுடைய வீரச் செயல்களை பாடுவதும், அவர்களுடைய மூதாதையரைக் குறித்த புகழ்வதும் அவன் தொழில்.கல்வி அறிவில் குறைந்தவன். ‘A bard’ was an inferior poet in Ireland.தமிழ் நாகரிகத்தில் காணப்படும் ’புலவன்’Gaelic நாகரிகத்தில் Fili எனப்பட்டான். ’Ollav’ என்றும் அழைக்கப்பட்டான். அரசனுடன் சரிசமமாக அமர்ந்து உண்ணும் சலுகையைப் பெற்றவன். கல்வி கேள்விகளில் மிகவும் சிறந்தவன். அவனால் பாடப்படுவதை Gaelic அரசர்கள் பெரும் பேராக கருதினார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கல்வி கற்று தேர்ந்தவராக இருந்தவன் Gaelic ‘புலவன்’ . தமிழ் புலவர்களைப் போலவே உண்மையைக் கூறும் “செந்நாப் புலவராக” திகழ்ந்தவன். சராசரி மனிதர்கள் தரும் மதிப்பை விட தம் போன்ற புலவர்களின் மதிப்பையே பெரிதும் விரும்பியவன்.
நம் சங்க இலக்கியத்தில் புறப்பொருளைக் கொண்ட பாடல்களில் ஏழு திணைகள் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. அதில் ஆநிரையைக் கவர்தல் வெட்சித் திணை. அதை மீட்டல் கரந்தை திணை. கால்நடை பொருளாதாரம் சார்ந்த சிறுகுடி மக்கள் சமுதாயங்களின் இது நடைபெறுவது இயல்பு. இதை ஆங்கிலத்தில் ‘Cattle raiding’ என்பார்கள். இந்த செயல்கள் Gaelic பழம் நாகரிகத்திலும் இயல்பாக நடைபெற்ற செயல்கள். இதை நம் தமிழ்ப் புலவர்களும் பாணர்களும் பாடினது போல் Gaelic bards களும் fila களும் பாடி வைத்தார்கள். புறப்பாடல்களில் பகைவனின் மதிலை சூழ்ந்து போரிடுதல் உழினஞ திணையாகும். மதிலை காத்தல் நொச்சி திணையாகும். இதை ‘raiding of fortifications’ என்பார்கள். இதையும் Gaelic கவிஞர்கள் பாடினார்கள். இவை மற்றுமல்லாமல் தம்மை ஆதரித்த அரசர்கள், சிற்றரசர்களின் காதல் வாழ்க்கையைக் குறித்தும் பாடினார்கள்.சங்க இலக்கியத்தின் அகப்பாடல்கள் தலைவன் தலைவி பெயரைக் குறிப்பிடாமல் பாடியது போல் அல்லாமல் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டே பாடினார்கள்.
இது இவ்வாறு இருக்க, நம் முன் எழும் கேள்வி, சங்ககால கலாச்சாரத்திலும், Gaelic கலாச்சாரத்திலும் ஏன் அரசர்கள் புலவர்கள் உடன் இந்த உறவு முறைகளை போற்றி வந்தார்கள்? What is the dynamic behind this relationship? அக்காலத்தில் ‘High Poetry’ அதாவது செம்மை வாய்ந்த உயர்ரக கவிதைகளும் பாடல்களும் அரசன் இல்லாமலும் இல்லை; புலவன் இல்லாமலும் இல்லை. இந்த உறவு தகர்க்க முடியாத உறவு; inseparable relationship. ஏன் ?
ஏனெனில் அரசத்தன்மை ஒரு புலவனின் பாடலில் அங்கீகாரம் பெறுகின்றது. புலவன் ஒரு அரசனை ஒரு பாடலில் போற்றுவதனால்அந்த அரசனின் அரசத்தன்மை (kingship) பெருந்தகுதி பெறுகிறது. சான்றோரான புலவன் மற்ற சான்றோர்கள் நிறைந்த அவையில் ஒரு குறிப்பிட்ட அரசனின் குணங்களையும், வெற்றிகளையும், செய்கைகளையும் புகழ்ந்து பாடும் பொழுது, அந்த அரசன் அரசாளுவதற்குரிய தகுதிகளை பெறுகின்றான். அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள குணங்களை உண்மையில் பெற்றது போல், அத்தகுதிகளைக் கொண்டுதான் அரசாளும் உரிமையை தான் பெற்றதாக நம்பி பெருமிதம் அடைகிறான். The act of poetic praise reaffirms his right to rule because of the superior attributes described in the poem. எனவே தான் அரசர்களும் புலவர்களை பேணி பரிசில் அளித்தார்கள். சிறூர் தலைவர்களும் பாணர்களை பேணி வந்தார்கள்.
இதே கருத்துதான் Gaelic கலாச்சாரத்தையும் ஊடுருவி இருந்தது. Gaelic அரசர்களும் சங்ககால அரசர்களைப்போல் புலவர்கள் சூழ இருந்தார்கள். சங்ககால புலவர்கள் பாடியது போல் filaவும், ollavகளும், அரசன் செங்கோல் ஆட்சி தவறாமல் இருந்தால் நாடும் செழிப்புடன் இருக்கும் என்று பாடினார்கள். அத்தகைய நல்லரசன் இறந்தால் நாட்டின் செழிப்பும் அழியும் என்று பாடினார்கள். பழந்தமிழகத்தில் அரசர்களிடையே இடைவிடாது போர்கள் நடந்தது போல் பழைய Ireland இலும் அவ்வாறே இருந்தது. அவர்கள் போரில் இறந்த பொழுது, நம் நாட்டு ஒளவையாரும், கபிலரும் புலம்பி அழுதது போல், filaவும், bardsகளும் புலம்பி பாடல் இயற்றினார்கள். “ஆறுகளில் மீனினம் வறண்டது; பயிர்கள் வளராமல் வாடின; கடல் அழுகை ஓயவில்லை; குயில் பாட வில்லை” போன்ற புலம்பல் Gaelic கவிதைகளில் உள்ளன. ’இந்த வீர அரசன் இறந்து விட்டான்; நம் போன்ற புலவர்களுக்கு இனி புகலிடம் இல்லை; அரசன் சென்ற வழி நாமும் செல்வோம் என்ற புலவர்களின் அழுகை நம் சங்கப் பாடல்கள் பலவற்றை நினைவு கூறுகின்றன.
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on September 12, 2020 #Kavitha Rajasekar #Megala Ramamoorthy #Parimala Nathan #Bharathi