இதழ்: இருபத்தி இரண்டு , சூலை
ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா
தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ
- செய்தி மடல் ஆசிரியர் பகுதி
- செவி வழிக்கல்வி - திருக்குறள் — கவிதா ராஜசேகர்
- மாணவர் பகுதி
- கொரோனவால் இழந்ததும் பெற்றதும் — பா.சமிக்ஷா - நிலை 2
- ஓவியம் 2020 — ரா.திருத்யா - நிலை 1
- எளிமையின் சிகரத்திற்கு பிறந்த நாள்! – எழிலோவியா - நிலை 1
- அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
- இலக்கிய பகுதி
- மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் — எக்கார்ட் டாலே (Eckhart Tolle) — மேகலா இராமமூர்த்தி
- கேள்வி பதில் பகுதி — முனைவர் பரிமளா நாதன்
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகத்தில் இளந்தளிர் (Pre-K), மழலை(KG), நிலை 1 தொடங்கி நிலை 8 வரை செயல்படுகிறது. கடந்த 2019-2020 கல்வி ஆண்டில், தமிழ் பள்ளியில் மொத்தம் 187 மாணவர்கள் பல்வேறு நிலைகளிலும் மூன்று கிளைகளிலும் நம் மொழி கற்றனர் என்பதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
சென்ற கல்வியாண்டின் கூடுதல் சிறப்பு, தமிழ் பள்ளியில் முதல் முறையாக, நான்கு மாணவர்கள் பள்ளி தொடங்கிய காலத்தில் இருந்து நம்மோடு பயணித்து நிலை 8 வரை வெற்றிகரமாக முடித்து உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் தமிழ் பள்ளி தம் பாராட்டுக்களையும், வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

இடமிருந்து வலம்:
மாணவர்கள் சஞ்சீவ்சர்வேஷ் ராஜா, அகில் முகைதீன்,
ஷெர்லி அந்தோணிபிரகாஷ், ஸ்வேதா ஜெயகோபால்
மற்றும் நிலை 8 ஆசிரியர் சீனிவாசன்
கடந்த மூன்று வாரங்களாக நம் பள்ளி, மாணவர்களுக்கான கோடை கால பேச்சு பயிற்சி வகுப்புகளை மெய்நிகர் வகுப்புகளாக நடத்தி வருகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
வீட்டிலேயே முடங்கி இருக்கும் நம் குழந்தைகளுக்கு பல்லாங்குழி, பரமபதம், தாயம், ஆடு புலி ஆட்டம், தாயம், பாண்டி, பம்பரம், கிளித்தட்டு போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்துங்கள். புதுமை விரும்பிகளான குழந்தைகள் கண்டிப்பாக ஆர்வத்துடன் கற்பார்கள் ; நாமும் புத்துணர்வு பெறுவோம்.
மேலும் அவர்களுக்கு பீர்பால், தெனாலிராமன் கதைகள், பழமொழி, விடுகதைகள் என்று புத்தகங்களாகவோ, ஒலி பதிவாகவோ தெரியப்படுத்தி அவர்களோடு உரையாடுங்கள். ஆர்வமுடன் கற்பர், புது சிந்தனைகள் உருவாகும்.
இன்றைய நிலையற்ற சூழ்நிலையில் அனைவரும் சமூக விலகலைக் கடைபிடித்து உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்வுடனும் இந்த கோடையை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
சென்ற மாத இதழில், மாணவர் பகுதியில், பரதத்தையும், நீச்சலின் முக்கியத்துவத்தையும் நம் மொழியில் மாணவர்கள் தம் சிந்தனையை வெளிப்படுத்தியமை கண்டு பேருவகை கொண்டோம். பங்களித்த மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்
தொழில்நுட்பங்கள் மிகவும் இல்லாத அச்சமயங்களில் , கெப்ளரின் ஆராய்ச்சியும் அவர் நமக்கு அளித்துச்சென்ற வான்வெளிக்குறிப்புகளையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அறிவியல் கட்டுரைகள் தொடர்ந்து நம் மொழியில் வெளி வருவதை மிகவும் வரவேற்கிறோம்.
“சங்க காலத்தில் மகளிர்” என்ற கட்டுரையில், அக்கால பெண்கள், இன்றைய நவீன சூழலில் உள்ள பெண்களுக்கு நிகரானவர்களாக ஓர் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்ட செய்தி சிந்திக்கவும், பெருமிதம் கொள்ளவும் வைத்தது.
அகஸ்தியரை பற்றி வெளிவந்த ஆராய்ச்சி குறிப்புகள் முற்றிலும் புதிய கோணத்தில் இருந்தது. அடுத்த பகுதியை வாசிப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக வாசகர்கள் தெரிவித்தனர்.
“கேள்வி பதில்” பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை newsletter@tampabaytamilacademy.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
செவி வழிக்கல்வி - திருக்குறள்
|
![]() |
இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்
திருக்குறள் அறன் வலியுறுத்தல் விளக்கம்
திருக்குறள் இல்வாழ்க்கை விளக்கம்
மாணவர் பகுதி
மாணவர் பகுதிக்கு தொடர்ந்து வரும் ஆதரவைக் கண்டு மிகுந்த மன நிறைவு கொண்டோம். பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும். |
கொரோனவால் இழந்ததும் பெற்றதும்
|
![]() |
ஓவியம் 2020
|
![]() |
எளிமையின் சிகரத்திற்கு பிறந்த நாள்!
|
![]() |
அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
எனக்கு pink color dress போட பிடிக்கும் | எனக்கு இளஞ்சிவப்பு வண்ண உடை அணிய பிடிக்கும் |
நான் என் neighbor friends கூட விளையாடுவேன் | நான் என் அண்டை வீட்டு நண்பர்களோடு விளையாடுவேன் |
நான் face mask போட்டு என் அப்பாவோடு கடைக்கு போனேன் | நான் முகக்கவசம் அணிந்து என் அப்பாவோடு கடைக்குச் சென்றேன் |
என் அம்மா morning breakfastக்கு இட்லி கொடுத்தார்கள் | என் அம்மா காலை சிற்றுண்டிக்கு இட்லி கொடுத்தார்கள் |
நான் விளையாட போகும் போது water bottle எடுத்துச் செல்வேன் | நான் விளையாட போகும் போது தண்ணீர் குடுவை எடுத்துச் செல்வேன் |
இலக்கிய பகுதி
ஆசாரக்கோவை
ஆசிரியர் பெயர் - பெருவாயின் முள்ளியார்
ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்று பொருள் தரும்.
நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களைக் கோவைப் படுத்தி கூறுவதால் இந்நூல் ஆசாரக்கோவை எனப் பெயர் பெற்றது.
‘ஆசாரங்களினது கோவை’ என்றோ, ’ஆசாரங்களைத் தொகுத்த கோவை’என்றோ, இத்தொடருக்குப் பொருள் கூறலாம்.
‘ஆசார வித்து’ (1) என்று தொடங்கி,‘ஆசாரம் வீடு பெற்றார்’ (100) என முடியும் நூறு செய்யுட்களில் தாம் கூறப் புகுந்த ஆசாரங்களை ஒரு நெறிப்பட ஆசிரியர் கோவை செய்துள்ள சிறப்புக் கவனித்தற்கு உரியது.
பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர, நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும்
மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார்.
இந்நூல் வடமொழி ஸ்மிருதிக்கருத்துகளைப் பின்பற்றி எழுந்தது என்பது,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்
எனவரும் சிறப்புப் பாயிரச் செய்யுட் பகுதியால் தெரியவருகிறது.
இனி ஆசாரக்கோவை கூறும் சில ஒழுக்கங்களைப் பாடல்கள் வாயிலாகக் காணலாம்.
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ
டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து
இதன் பொருள்.
தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமையும், பொறுமையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் துன்பந்தருபவற்றை செய்யாதிருத்தலும்,
கல்வியும், ஒப்புரவை மிக அறிதலும், அறிவு உடைமையும், நல்ல இயல்புள்ளவர்களுடன் நட்புச் செய்தலும் என்ற
இவ்வெட்டு வகையும் அறிஞர்களாற் சொல்லப்பட்ட ஒழுக்கங்கள் ஆகும்.
மேலும்,
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து
அதாவது குளித்துக் கால்கழுவி வாய்பூசி உண்ணுமிடம் மண்டலஞ் செய்து உண்டார் உண்டாராவர்.
இப்படிச் செய்யாமல் உண்டவர்கள், உண்டாரைப்போல வாய்பூசிப் போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொண்டார் என்பது இதன் பொருள்.
அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு,உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் பலவாம்.
வைகறைத்துயில் எழுதல் முதல், காலைக் கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப்படுகின்றன.
மேற்கொள்ளத்தக்கன இவை, விலக்கத் தக்கன இவை, எனச் சில ஆசாரங்களைவிதித்தும், சிலவற்றை விலக்கியும் சொல்லும் முறைகவனிக்கத் தக்கது.
மேலும், நின்றும் கிடந்தும் உண்ணக்கூடாது என்று உண்ணும் முறை பற்றி இந்நூல் அறிவுறுத்துகின்றது.
உண்ணும்போது தித்திப்பை முதலிலும்,கசப்பை இறுதியிலும் ஏனைய சுவைகளை இடையிலும் உண்ண வேண்டும் என்பது இந்நூற்கருத்து.
பயணம் புறப்படுகின்ற ஒருவரை பின்நின்று கூப்பிட லாகாது. பயணம் புறப்படுகையில் தும்மலாகாது. எங்கு செல்கிறீர் என கேட்கலாகாது என்று இந்நூல் கூறும் கருத்துக்கள் இன்றும் மக்களிடையே பழக்கத்தில் இருக்கின்றன.
மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் — எக்கார்ட் டாலே (Eckhart Tolle)
|
![]() |
1948ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தவரும் இப்போது கனடாவில் வசித்து வருபவருமான உல்ரிச் லியொனார்டு டாலே (Ulrich Leonard Tölle), இன்றைய உலகின் குறிப்பிடத்தக்க ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவர். இவரை ஆன்மிக வழிகாட்டி என்பதைவிடவும் மனித மனத்தை வளப்படுத்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவும் மனவளக்கலை நிபுணர் (Expert in the art of living) என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
இவருடைய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சென் புத்தமதம் (Zen Buddhism), சூபித் தத்துவம் (Sufism), இந்துமதம் Hinduism மற்றும் கிறித்தவ மதம் (Christianity) போன்றவற்றின் சிறந்த சிந்தனைகள் இடம்பெற்றிருந்தாலும், இச்சிந்தனைகளை இவர் மதம் பரப்பில் நோக்கில் பயன்படுத்தாமல், வாழ்வுக்கு உதவும் நற்கருத்துக்கள் இவை என்ற அடிப்படையிலேயே பயன்படுத்துவது, எவ்வித மத அடையாளமும் அற்ற மனவளக் கலை நிபுணராக மேற்குலக மக்களிடம் இவரை அடையாளப்படுத்தியிருக்கின்றது.
தம்முடைய ஆன்மிக ஆசான்களாக கௌதம புத்தமர் (Gautama Bhuddha), இரமண மகரிஷி (Ramana Maharshi), ஜித்து கிருஷ்ணமூர்த்தி (Jiddu Krishnamurthy), மற்றும் ரூமி (Rumi) ஆகியோரை குறிப்பிடுகின்றார் எக்கார்ட் டாலே.
டாலேயின் இளமைக்கால வாழ்வை ஆராய்ந்தால், ”நான் தென்றலைத் தீண்டியதில்லை; ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்” என்ற பராசக்தி வசனந்தான் நம் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அவருடைய இளமைக்காலம் துயர் நிறைந்ததாக இருந்திருக்கின்றது. ஜெர்மனியில் அவர் கழித்த குழந்தைப்பருவ நாள்களில் அவருடைய தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த சண்டைகளையும் அதைத் தொடர்ந்து அவர்களிடையே ஏற்பட்ட மணமுறிவையும் காணக்கூடிய அவலநிலை அவருக்கு வாய்த்திருக்கின்றது.
தம் பதின்மூன்றாம் வயதில் தந்தையோடு ஸ்பெயினுக்குச் சென்றார் டாலே. தந்தையார் அவரைக் கல்வி கற்க வற்புறுத்தாத நிலையில் தாமாகவே முயன்று இலக்கியம், வானியல், பிற மொழிகள் போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே கற்றிருக்கின்றார். தம் பதினைந்தாவது வயதில் ஜெர்மனியின் ஆன்மிகச் சிந்தனையாளரான பொஇன்ராவின் (Joseph Anton Schneiderfranken, aka Bô Yin Râ) புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய டாலே அவற்றில் ஆழ்ந்துபோனார்.
பத்தொன்பது வயதில் இங்கிலாந்திலுள்ள இலண்டனுக்குச் சென்ற அவர், அங்கிருந்த மொழிப்பாடங்கள் நடத்துகின்ற பள்ளியில் (London school for language studies) ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மானிய மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இனம்புரியாத அச்சமும் மனஅழுத்தமும் அவரைக் கடுமையாகத் தாக்கவே தம் எதிர்கால வாழ்வு குறித்த கவலையில் அவர் ஆழ்ந்திருக்கின்றார்.
மனத்தைத் திசைதிருப்ப, இலண்டன் பல்கலைக்கழத்தில் தத்துவம், உளவியல், இலக்கியம் உள்ளிட்ட பாடப்பிரிவில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார். முதுகலைப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர அவருக்கு அரசின் உதவித்தொகை கிடைத்தும் அதனைத் தொடராது பாதியிலேயே கைவிட்டிருக்கின்றார்.
தம்முடைய இருபத்தொன்பதாவது வயதில் மீண்டும் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகி அவர் துயருற்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கிடைத்த அகவிழிப்பால் (spiritual awakening) தம் வாழ்வின் துன்ப நினைவுகளிலிருந்து மீண்டிருக்கின்றார். மறுநாள் முதலே தம் வாழ்வு கலக்கமற்ற அமைதிப்பூங்காவாகத் தோற்றமளித்தது என்றுகூறி நம்மை அதிசயிக்க வைக்கின்றார்.
அதனைத் தொடர்ந்துவந்த காலங்களில் தியானத்திலும் அகத்தாய்வுப் பயிற்சிகளிலும் (meditation and intense contemplation) டாலே ஈடுபடத்தொடங்கவே அவரைப் பொறுப்பற்றவர் என்றும் பைத்தியக்காரன் என்று முத்திரை குத்திப் பகடி செய்திருக்கின்றது அவருடைய குடும்பம். அதைப் பொருட்படுத்தாத அவர் அங்கிருந்த புத்த மடத்திலும், இலண்டன் ஹித் எனப்படும் பரந்த புல்வெளிப் பிரதேசத்திலுமாகத் தம் வாழ்க்கையைக் கழித்திருக்கின்றார்.
அந்தக் காலக்கட்டத்தில் உல்ரிச் (Ulrich) என்ற தம்முடைய முதற்பெயரை எக்கார்ட் (Eckhart) என்று அவர் மாற்றிக்கொண்டிருக்கின்றார். மெயிஸ்டர் எக்கார்ட் (Meister Eckhart) எனும் ஜெர்மானியத் தத்துவ அறிஞருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இதனை அவர் செய்திருக்கின்றார் என்று அறிகிறோம். அதுமுதல் உல்ரிச் டாலே, எக்கார்ட் டாலே ஆனார்.
அகத்தாய்வுப் பயிற்சிகளால் அவரடைந்த மனவளத்தை அறிந்த கேம்பிட்ஜ் பல்கலைக்கழக மாணாக்கர் பலர், மனநல ஆலோசனைகள் வேண்டி அவரிடம் வரத்தொடங்கினர். டாலேயின் புகழ் அமெரிக்காவிலும் பரவவே அங்கும் மனவளக்கலை தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்த அடிக்கடிச் சென்றுவரலானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தம்முடைய இருப்பிடத்தைக் கனடாவிலுள்ள வான்கூவர் (Vancouver) நகருக்கு நிரந்தரமாக மாற்றினார் டாலே. தம்முடைய வருங்கால மனைவியான கிம் எங்கை (Kim Eng) அவர் சந்தித்ததும் அங்கேதான்!
மனிதர்கள் அந்தந்த நொடிக்கான வாழ்வை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எக்கார்ட் டாலே எழுதி, 1997இல் வெளிவந்த ’The Power of Now: A Guide to Spiritual Enlightenment’ என்ற நூலும், பொருளைத் துரத்திக்கொண்டு ஓடாமலேயே பொருள்பொதிந்த வாழ்க்கையையும் புத்துலகையும் படைக்கலாம் என்பதை விளக்கும் வகையில் அவர் எழுதி 2005இல் வெளியான ’A New Earth: Awakening to Your Life’s Purpose’ என்ற நூலும் மிகவும் புகழ்வாய்ந்தவை.
‘The Power of Now’ புத்தகத்தைப் படித்த பிரபல தொலைக்காட்சித் தொடர் நடத்துநரும், தயாரிப்பாளருமான ஓப்ரா வின்பிரே (Oprah Winfrey), எக்கார்ட் டாலேயைத் தன்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி, அவருடைய ’The Power of Now’ நூலை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்று பரிந்துரைக்க, டாலே ஒரேநாளில் உலகறிந்த மனவளக்கலை நிபுணரானார். இந்நூல் அரேபிய மொழி உட்பட உலகின் 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2009 வாக்கில் ’The Power of Now’ புத்தகம் அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் படிகளும், ’A New Earth’ புத்தகம் 5 மில்லியன் படிகளும் விற்று அதிகம் விற்பனையான புத்தகங்கள் (the best sellers) என்ற புகழை அடைந்திருக்கின்றன.
டாலேயின் புகழ்பெற்ற நூல்களான ‘The Power of Now’விலிருந்தும் ’A New Earth’இலிருந்தும் சில செய்திகளை நாம் அறிந்துகொள்வது வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
’The Power of Now’ புத்தகத்தின் தொடக்கத்தில் தம்முடைய கடந்தகாலக் கசப்பான அனுபவங்களை ஒளிவுமறைவின்றி விவரிக்கும் டாலே, அன்பாகவும் அமைதியாகவும் வாழவே நாம் இயற்கையால் படைக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் நாமோ வலிகளால் நம்மை நிரப்பிக்கொண்டு அவதிப்படுகின்றோம். வலி என்பது இன்னொரு வலியைத்தான் தருமே தவிர அதிலிருந்து மகிழ்ச்சி கிடைக்க வழியில்லை என்கிறார்.
அதுபோல் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்றெண்ணிக் கலங்குவதும் எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை. எனவே கடந்துபோன கசந்த காலத்தையும், புதிரான எதிர்காலத்தையும் எண்ணிக் கலக்கமும் குழப்பமும் அடைவதை விட்டு, மனிதர்களே, நிகழ்காலத்துக்கு வாருங்கள். கடந்துசெல்லும் நொடிகள் எவையும் திரும்ப வாரா என்பதை உணர்ந்து இந்த நொடிக்கான வாழ்வை வாழுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
இலக்குகளை உருவாக்கி அவற்றை அடைவது குறித்தே சிந்திப்பதையும் அவற்றை அடைந்தால்தான் வாழ்வில் வெற்றி என்று நினைப்பதையும் நிறுத்துங்கள் என்று குறிப்பிடும் டாலே, இவையே உங்களை மன அழுத்தத்தில் தள்ளுபவை. அதற்கு மாறாக இந்த நொடியில் உங்கள் வாழ்க்கை - நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை - எவ்வாறிருக்கின்றதோ அதனை ஏற்றுக்கொண்டு வாழப் பழகுங்கள்! விழிப்புணர்வு உடையதாகவும் அதே சமயம் அவசியமில்லா எண்ணங்கள் அற்றதாகவும் உங்களின் இப்போதைய பொழுது அமையட்டும்!
முதுமை என்பது நம்முடைய புறவுடலுக்குத்தானேயன்றி அகவுடலுக்கு இல்லை; அகத்தினை மேம்படுத்தும் மனவளப் பயிற்சிகளால் முதுமையைத் தள்ளிப்போடவும் நம் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தவும் முடியும் என்கிறார். ஞானம் பெறுதல் என்பது நம் எண்ணங்களை மேம்படுத்துவதும் நாம் யார் என்பது குறித்த தெளிவான விழிப்புணர்வை அடைவதுமே ஆகும்; அஃது ஏதோ பகுத்தறிவுக்குப் புறம்பான விந்தைச் செயலன்று என்கிறார்.
’A New Earth’ என்ற தம்முடைய மற்றொரு நூலிலும் மனித மனம் தன்னைப் பற்றியும் தன்னுடைய புறச்சூழல் பற்றியும் விழிப்போடு இருக்கவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகின்றார்.
நம்முடைய மகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சியின்மைக்கும் நம்முடையே எண்ணங்கள்தாம் காரணமேயன்றிச் சூழ்நிலைகள் அல்ல என்கிறார் டாலே திடமாக. தன்னை ஒருவன் சுயபரிசோதனை (introspection) செய்து செம்மைப்படுத்திக் கொள்வதன் மூலமும், தனக்கென்று போலியாக எந்த பிம்பத்தையும் உருவாக்கிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதன் மூலமும் நல்ல மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் தன்னுடைய சொந்த வாழ்விலும் சமுதாயத்திலும் ஏற்படுத்த முடியும் என்பது டாலேயின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
இந்த நூலில் இறுதிப் பகுதியான ‘புதிய பூமி’ (A New Earth) என்பதில் முத்தாய்ப்பாக அவர் முன்வைக்கும் செய்தி இதுதான்: ”நாம் சாதாரண மனிதர்கள்தாம்; ஆனால் நம்முடைய செயல்களால் ஓர் அசாதாரணமான புத்துலகை நம்மால் படைக்கமுடியும்!”
நகைச்சுவை உணர்வும் நிரம்பப் பெற்றவர் எக்கார்ட் டாலே என்பதை அவருடைய மேடைப் பேச்சுகள் நிரூபிக்கின்றன. இன்றைய எண்ணிம உலகத்துக் கண்டுபிடிப்பான கைப்பேசி குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் டாலே, தொலைபேசிகள் பயனுள்ளவைதாம். ஆனால் இன்றைய கைக்கு அடக்கமான கைப்பேசிகளோ நம்மை ஏவும் முதலாளிகள் ஆகிவிட்டன; நாமோ அவை சொல்வதைக் கேட்கும் அடிமைகளாகிவிட்டோம். ஓர் உணவகத்துக்குப் போனால்கூடக் கைப்பேசியையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தக்கூட அல்லவா மறந்துபோய்விட்டது நமக்கு? என்று கேட்கிறார்.
அன்றாடம் பல்வேறு வகைகளில் மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகும் நாம் மன ஒருமைப்பாட்டையும் அமைதியையும் அளிக்கவல்ல தியானப் பயிற்சிகளை மேற்கொண்டும், எக்கார்ட் டாலே சொன்ன வாழ்வியல் முறைகளைப் பின்பற்றியும் நம் மனத்தை நல்லெண்ணங்களால் நிரப்புவோம்; அதனால் நம் அகத்துள் பூக்கும் மகிழ்ச்சியை அகிலமெங்கும் பரப்புவோம்!
கேள்வி பதில் பகுதி
|
![]() |
கேள்வி:
அகஸ்த்தியர் யார்? வரலாற்று மனிதரா அல்லது ஒரு கருத்தாக்கமா? Historical Personage or a concept?
பதில் (Part 2):
சென்ற இதழில் அகஸ்த்தியர் கதை ஏன், எப்படி தமிழகத்தில் உருவானது என்று அடுத்த இதழில் பார்ப்போம் என்று கூறினோம். இங்கு அதை சுருக்கமாக பார்ப்போம்.
தமிழகத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள் ஒழிய அதனை ஆராய முற்படவில்லை. வாழ்க்கையை தத்துவக் கண்ணோட்டத்தில் அவர்கள் அணுகவில்லை. மீமெய்யில் (Metaphysical) கேள்விகளை அவர்கள் எழுப்பவில்லை. ஆன்மா என்று ஒன்று உண்டா, மனிதன் இறந்த பிறகு ஆன்மா எங்கு செல்கின்றது, மேலுலகு என்ற ஒன்று உள்ளதா, கர்ம வினைப்பயன் என்பது உள்ளதா என்ற இவ்வாறான கேள்விகள் அவர்கள் மனதில் எழவில்லை. செயல் வழியாகத்தான் வாழ்க்கையின் பொருளை நாடினார்கள். தத்துவங்கள் வழியாக வாழ்க்கையின் பொருளையோ இலக்கையோ புரிந்துக் கொள்ள முற்படவில்லை. The ancient Tamils were action-oriented and not speculative by nature. அதனால் தான் அக்கால தமிழ் மக்களிடையே கட்டுக்கதைகளும் “புராண” ரீதியான கதைகளும் எழவில்லை. அவர்களின் ஆளுமையும், தனித்துவமும் அதற்கு இடம் தரவில்லை. சங்கப் பாடல்களில் மிகவும் பழமையானவை எவை என்று அறிவதற்கு இதுவே அடையாளம். புராணக் கதைகளின் குறிப்பும், கலப்பும் இல்லாத பாடல்கள் தான் மிகவும் பழமையானவை.அக்கால சமூகத்தில் ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் மன இயல்பை, ஆளுமையை குறியிட்டுக் காட்டுகின்றன இப்பழைய பாடல்கள்.புராணக் கதைகளின் குறிப்புகள்(references and allusions)உள்ள சங்கப் பாடல்கள் காலத்தால் மிகவும் பிந்தியவை. அப்படி செயல் சார்ந்த மக்களாக இருந்ததால் (action-oriented and empirical), ஒரு சிறு கமண்டலத்திலிருந்து ஒரு பெரிய ஆறே (காவேரி) உருவெடுத்து, வழிந்தோடியது என்றோ, ஒரு மனிதன், கடல் நீரை முழுதும் பருகினான் என்ற மீகற்பனை கதைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடையே பின் எவ்வாறு பிற்காலத்தில் அகஸ்த்தியர் கதை போன்ற கதைகள் எழுந்தன?
பழங்கால தமிழ் மக்களின் வழிபாடுகள் இயற்கை வழிபாடும், இறந்தோர் மற்றும் மூதாதையரின் வழிபாடும் ஆக இருந்தன. (உலக வரலாற்றில் எந்த பழங்கால சமுதாயத்திலும் அதுதான் வழக்கமாக இருந்தது) எனவே தமிழர்களுக்கு பெருந்தெய்வம் என்ற கருத்தாக்கம் இல்லை. மதம் (Religion) என்ற ஒன்று அப்பொழுது இல்லை. அவர்களுக்கு அது தேவைப்படவுமில்லை.(பழங்கால வழிபாடு முறைகள் என்பது வேறு, மதம் என்ற நிறுவனம் வேறு) இத்தகைய சமுதாயத்தில் வடக்கிலிருந்து பிரச்சாரம் செய்வதை குறிக்கோளாகக் கொண்ட (missionizing and proselytizing religions) மதங்களான பௌத்த மதமும் சமண மதமும் வந்தன. சமணமதம் கர்நாடக தேசத்தின் வழியாகவும் பௌத்தமதம் ஆந்திர தேசத்தின் வழியாகவும் தமிழகத்துக்குள் வந்தன. இது கி.மு 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இவை இரண்டும் பிரச்சார மதங்களாக இருந்தாலும் புராணக்கதைகள் இல்லாத சமயங்கள். They were both purely ethical systems with a strict code of discipline in life.இவர்களைப் பின்தொடர்ந்து வைதீக மதமும் தமிழகத்துக்கு வந்தது. முதலில், கி.பி ஓரிரண்டு நூற்றாண்டுகளில், மிகக் குறைந்த அளவில் வேதியர்கள்/அந்தணர்கள் தமிழகத்துக்கு வந்து, தனிமையில் தம் யாகங்களையும்,மந்திரம் ஓதுவதையும் வாழ்க்கை முறையாக்கிக் கொண்டு வாழ்ந்தார்கள். சங்கப் பாடல்கள் சில இத்தகைய அந்தணர்களைக் குறித்து குறிப்பிடுகின்றன.
இந்தக் காலத்தில், அதாவது கி.பி முதல் இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில், தமிழகத்தில் வந்த இந்த புதிய சமயங்கள் மதப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக செய்து மதங்களை பரப்பவில்லை. ஏனெனில், அந்த காலகட்டத்தில் தமிழ் மூவேந்தர்கள் தத்தம் நாடுகளின் எல்லைகளை பெருகச் செய்யும் நோக்கில் தமிழகமெங்கும் இருந்த சிறு நில மன்னர்கள், குறுநில மன்னர்கள், சீறூர் மன்னர்கள் ஆகிய வேளிர்கள் மீதும் கிழார்கள் மீதும் தொடர்ந்து படையெடுத்து, அவர்களை தோற்றுவித்து, அவர்கள் ஊர்களையும், மலைகளையும், மருத நிலங்களையும் தமதாக்கிக் கொண்டு, தத்தம் ஆட்சிகளையும் , குலங்களையும் (dynasties) நிலைநிறுத்திக் கொள்ளும் பணியில் தீவிரமாக மூழ்கியிருந்தார்கள். இத்தகைய சூழலில் மன்னர்கள் புதிதாக வந்த மதங்களின் மீது கவனம் செலுத்தவில்லை. அந்த மனநிலையிலும் இல்லை. தத்தம் நாடுகளையும், உரிமைகளையும் ஓரளவு நிலை நிறுத்திய பிறகே இந்த மதங்களின் மீது அவர்கள் கவனம் திரும்பியது. இதன் பிறகு தான் பௌத்தமும் சமணமும் நன்றாக தழைக்கத் தொடங்கின. அரசர்கள் பலர் சமணத்தையும் பௌத்தத்தையும் தழுவி அம்மதங்களின் நிறுவனங்களுக்கு ஆதரவும் உடைமைகளையும் தந்து வந்தார்கள் (support and endowments). இதற்குள்ளாக வடக்கிலிருந்தும் , பக்கத்து நாடுகளில் இருந்தும் (கர்நாடக, ஆந்திர) வந்த வைதீக அந்தணர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. வடக்கிலேயே வைதீக மதத்தினருக்கும் .வேதங்களை மறுத்து புறக்கணித்த பௌத்த சமண மதங்களுக்கும் , கடும் போட்டியும், காழ்ப்பும் இருந்தன. அது தென்னகத்திலும் தொடர்ந்தது. முக்கியமாக அரசர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இப்பகை, போட்டி , காழ்ப்பு அதிகரித்தன.அரசர்களின் ஆதரவை பொறுத்துத்தான் மதங்கள் வலிமையும் செல்வாக்கும் அடைகின்றன. இது உலக வரலாற்றில் எல்லா நாடுகளிலும் காணப்பெறும் உண்மை. ஆகவே அரசர்களின் ஆதரவை பெற வைதீக மதத்தினர் சில உத்திகளை கடைப்பிடித்தனர். வடநாட்டு ஆரிய மன்னர்களுடன் எந்த தொடர்பும் இல்லாத தமிழ் மன்னர்களை சூரிய குலத்தை சார்ந்தவன் என்றும், சந்திர குலத்தை சார்ந்தவன் என்றும் பாடம் கற்பித்து, அரசன் என்பவன் இறைவனுக்கு இணையானவன் என்றும், வடமொழிப் புராணங்கள், இதிகாசங்களுடன் எந்த தொடர்போ, அறிமுகமோ இல்லாத தமிழ் மன்னர்களை புராண இதிகாச மன்னர்களுடனும், அவர்கள் செயல்களுடனும், போர்களுடனும் Ex. பாரதப்போர்) தொடர்பு கற்பித்து அவர்களின் சுய மதிப்பை (self-esteem) ஏற்றிவைத்து பெருமைப்படுத்தினார்கள். தூய தமிழ் பெயர்களுடன் திகழ்ந்த தமிழ் மன்னர்களின் பெயர்களை, நீண்டு தொடர்ந்த வடமொழிப் பெயர்களாக மாற்றினார்கள். இவ்வாறு மன்னர்களை செயற்கையாக பெருமைப்படுத்தியது அல்லாமல், மக்கள் பேசிய தென்னகத்து மொழியான தமிழை வடநாட்டு “தேவ மொழியான” சமஸ்கிருதத்துடன் உயர்த்த முற்பட்டார்கள். தங்கள் மொழியை “தேவமொழியுடன்” இணைத்து குறிப்பிட்டால் எந்த இனத்திற்கு தான் மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படாது? ஒரு மொழி தெய்வத்தாலே அருளப்பட்டது என்றால், (defying the science of linguistic development) அம் மொழி பேசுவோரின் மன மகிழ்ச்சியும் , அடையும் பெருமை பற்றியும் கூற வேண்டுமா? The people’s vanity and sense of racial greatness would have been enhanced. சிவன் வடமொழியை பாணினுக்கு(Panini was the ancient Sanskrit grammarian) அருளி, தென்மொழியை அகஸ்தியனுக்கு அருளினான் என்ற புராணக் கதை இந்த காலகட்டத்தில் , மேற்கூறிய காரணங்களால் எழுந்தது. மன்னர்களையும் அவர்கள் மொழியையும் இவ்வாறு செயற்கையாக உயர்த்தி சிறப்பித்து, அவர்களின் ஆதரவையும் அதன் வழி மக்களிடையே வைதீக மத நம்பிக்கையும் ஏற்படுத்தினார்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் இதற்கு பெரும் ஆதரவு அளித்தார்கள்.
பல தேவாரப் பாடல்களில் சிவன் தமிழை அகஸ்தியனுக்கு அருளினான் என்ற செய்தியை பார்க்கலாம். தேவார காலத்தில் அந்த கதை பரவ ஆரம்பித்தது. The name of the ancient and dwarf sage Agasthiar served as a symbol of the transfer of sanctity to the Tamil language in par with Sanskrit for the reasons mentioned above: to receive the acceptance and favor of the Tamil people.
பின்குறிப்பு:
அடுத்த இதழில் அகஸ்தியரை குறித்த வடநாட்டு கதைகளின் தென்னகத்து எதிரொலிகளை பார்க்கலாம். The interesting parallels between the northern and southern legends of agasthiar are intriguing.
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on July 10, 2020 #Kavitha Rajasekar #Megala Ramamoorthy #Parimala Nathan